My dear YOIs after celebrating Ria's birthday. LONG LIVE YOI..!

With my Jesuit Friends in Pune.

With My Jesuit Family in Kodaikanal after our Summer Meet, 2015.

Enacting in the SSU play 'It's Great to be Young' directed by beloved Cyril Desbruslais.,SJ.

Clicked during my visit to Liverpool.

Showing posts with label Articles Tamil. Show all posts
Showing posts with label Articles Tamil. Show all posts

Sunday, 11 January 2015

பாவ சங்கீர்த்தனம் ஒரு பாக்கியமே...!

இதமான தென்றல் இதயத்தை வருடும் அந்த அருமையான மாலைப் பொழுதில் என் இல்லத் தலைவரோடு அருகில் உள்ள புனல்வாசல் என்ற  ஊருக்கு மாலைத் திருப்பலிக்காகச் சென்றேன். அருள் நிறை அருளப்பர் தேவாலயத்தில் மக்களின் பங்களிப்பைக் கண்டு பிரமித்துப்போனேன். யாரும் சொல்லாமலே வரிசையாக வந்து அழகாய் அமர்ந்த சிறுவ, சிறுமிகளைப் பார்த்து வியப்படைந்த வண்ணம் ஆலயத்தின் இறுதி இருக்கையிலே அமர்ந்து ஆண்டவனைத் தரிசிக்கத் தயாரானேன். எப்பொழுதும் போல என் இல்லத்தலைவர், திருப்பலிக்கு முன்னரே சென்று பாவசங்கீர்த்தன தொட்டிலில் அமர்ந்து தனது பணியைத் தொடங்கினார். “இந்தக் காலத்துல இப்புடி சாமியாருங்க போயி பூசைக்கு முன்னாடியே பாவசங்கீர்த்தன தொட்டிலில் அமர்வது அரிதாகி விட்டதே..." என்று யோசித்த வண்ணம் அமர்ந்து கொண்டிருந்தேன். ஒரு சில சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் சென்று தங்களின் பாவங்களை அறிக்கையிட்டு, மனத்துயர் பெற்று இறையாசீர் அடைந்ததைக் கண்டு, “ச்சே...இப்புடி விசுவாசத்தோட மக்கள் வாழ்றாங்களே....நம்மல்லாம் இவங்களோட விசுவாசத்துக்கு முன்னாடி எம்மாத்திரம்..!" என்று யோசித்தவாறு இருந்தேன். என் இல்லத்தலைவர் திருப்பலி ஆரம்பித்து, அருமையாகப் பாடி, மக்களைப் பரவசப்படுத்த தொடங்கினார். திருப்பலி ஆரம்பித்து, ஓர் ஐந்து நிமிடங்கள் கழித்து தாமதமாக ஓர் அம்மா வந்து என் அருகிலே அமர்ந்தார். “பாவம்...வீட்டு வேலையை முடிச்சுட்டு வர்றதுக்கு நேரமாய்ருச்சு போல..."என்று எனக்குள் யோசித்த நான், திருப்பலி முழுவதும் அந்த அம்மாவின் பக்தியால் ஈர்க்கப்பட்டேன். வயதான காலத்திலும் முழந்தாள் படியிட்டு பக்தியோடு அவர் இறைவனிடம் வேண்டுதல் செய்தது என் இதயத்தின் ஆழத்தில் விசுவாச வேட்கையைத் தூண்டியது. திருவிருந்து நேரத்தில் அனைவரும் சென்று இறைவுணவைப் பகிர இந்த அம்மா மட்டும் அமர்ந்த இடத்திலேயே, சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவோடு ஏதோ உரையாடிக் கொண்டிருந்தார். உடனே அந்த அம்மாவிடம் கேட்க வேண்டும் என என்னில் எண்ணங்கள் எழுந்தாலும், திருப்பலி நேரத்தில் பேசுவது முறையல்ல என எண்ணிக் காத்துக் கொண்டிருந்தேன். திருப்பலி இனிதே நிறைவு பெற, அந்த அம்மாவிடம் பேச யாசித்து காத்திருந்தேன். திருப்பலி முடிந்தும் ஒரு பத்து நிமிடங்கள், அமைதியாக அந்த அம்மா இறைவேண்டுதல் செய்துவிட்டு தள்ளாடி தள்ளாடி நடந்து வந்தார். “அம்மா...நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டவாறே, “கோயில்ல ரொம்ப பக்தியா இருந்தீங்கம்மா...இந்த வயசுலயும் முழங்கால் போட்டு வேண்டுறீங்களே..நீங்க உண்மையிலே...." என்று ஆச்சிரியமாய் சொல்லி முடிப்பதற்குள், “இதெல்லாம் என்னப்பா வலி....இயேசு சாமியைப் பாத்தியா...அவரு படாத கஷ்டமா..?" என்று என்னைக் கேட்டவாறே சிலுவையில் தொங்கிய இயேசுவைப் பார்த்தார்.“அம்மா... இவ்வளவு பக்தியா இருக்கீங்க... ஆனா.. நீங்க ஏன் இன்னைக்கி நன்மை வாங்கல...." என்று நான் வினவ, “அட..அதெல்லாம் பார்த்தியாக்கும்..." என்று சலித்துக் கொண்டே ஒரு சிரிப்பு சிரிக்க மேலே இருந்த அவரின் ஒற்றைப்பல் மட்டும் தெளிவாய்த் தெரிந்தது.  அந்த சிரிப்பிலே, கவலையின் மத்தியிலும் மகிழத்தெரியும் மந்திரம் தெரிந்தது. அது என் மனதைக் கவர்ந்தது. “சரி..ஏம்மா..நீங்க நன்ம வாங்கல..."என மறுபடியும் நான் கேட்க, “இன்னைக்கி நான் பூசைக்கு கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்ப்பா...அதுனால பாவசங்கீர்த்தனம் செய்யல...பாவசங்கீர்த்தனம் செய்யாம நன்ம வாங்குறது நல்லது இல்ல..." என்று சொல்லத்தொடங்கி, “எப்பவுமே...நான் நல்ல பாவசங்கீர்த்தனம் செஞ்சாத்தான்..மனசுக்கு நிம்மதி இருக்கும்....என்னோட வீட்டுல, கிராமத்துல, என்னோட மனசுல எவ்வளவு சுமை இருந்தாலும் பாவசங்கீர்த்தனம் செஞ்சு திவ்ய நற்கருணை உட்கொண்டா எனக்கு அவ்ளோ மனசுக்கு திருப்தியா இருக்கும்பா..." என்ற அவர், “கிறிஸ்தவளா பொறந்ததுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சுருக்கனும்...இதுல பாவசங்கீர்த்தனம் உண்மையிலே எனக்கு கெடச்ச ஒரு பெரிய பாக்கியமாப் பாக்குறேன்...சரிப்பா நான் வர்றேன்..." என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அவர் நகர்ந்தாலும் அவரின் வார்த்தைகள் என்னிலே அலை மோதிக்கொண்டிருந்தன. பாவசங்கீர்த்தனத்தின் பலன் எந்த அளவுக்கு ஒரு ஏழைப் பெண்ணின் துயர் துடைக்கும் கருவியாய் உள்ளது என்ற ஆழமான அர்த்தம் புரிந்தது. பல நேரங்களில், பாவ சங்கீர்த்தனத்தை வெறுமனே ஒரு சடங்காகப் பார்க்கும் கிறிஸ்தவர்கள் மத்தியில், அந்த அம்மாவைப் போன்று எத்தனையோ நல் உள்ளங்கள் பாவசங்கீர்த்தனத் தொட்டிலில் இறை அனுபவம் பெற்றுச் செல்கிறார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. கிறிஸ்தவர்களாய் வாழ அழைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும், கிறிஸ்தவளும் பாவ சங்கீர்த்தனம் நமக்கு கிடைத்த ஓர் ஒப்பற்ற பாக்கியமாய்க் கருதி பாவசங்கீர்த்தனம் மூலம் பலன் பெற வேண்டும், பலம் பெற வேண்டும். கிறிஸ்தவ மக்களுக்கு, பாவசங்கீர்த்தனம் ஒரு பாக்கியமாய் மாறிட வேண்டுமெனில், மக்களும், குருக்களும் இன்னும் அதிகமாக முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். குருக்கள் அனைவருக்கும் நித்திய குருவாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கொடுத்த ஓர் ஒப்பற்ற கொடை பிறரின் பாவங்களை மன்னிப்பது. அத்தகைய ஒப்புயர்வற்ற பணியினை ஒவ்வொரு குருவும் விரும்பி செய்ய வேண்டும், பாவசங்கீர்த்தனத் தொட்டிலிலே அமர்ந்து பிறரின் பாவச்சுமையை விரும்பி ஏற்று அவர்களுக்காக இறைவனிடத்தில் மன்னிப்பு வேண்டுவது குருக்களுக்கு கிடைத்த ஒரு பெரும் பாக்கியமே. நமது திருத்தந்தை ஆசிப்பது போல, “பாவ மன்னிப்பு அறை சித்திரவதைக் கூடமாக மாறி விடக்கூடாது.." மாறாக, ஒவ்வொரு குருவும் நித்திய குருவாம் இயேசுவை தன் வாழ்விலே பிரதிபலித்து பாவசங்கீர்த்தனத் தொட்டிலிலே, நம் இறைமக்களின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கி, ஆன்ம அமைதியை வழங்கிட ஆசிக்க வேண்டும். அப்போது, நிச்சயம் இறைமக்கள் அனைவரும் குருக்களிலே நம்பிக்கை கொண்டு, தங்களின் விசுவாச வாழ்வை இன்னும் அதிகமாக புதுப்பித்து கொள்ளலாம்.  நம் வாழ்விலே பாவசங்கீர்த்தனம் பெரும் பாக்கியம் என்பதை உணர்ந்து ஒவ்வொரு கிறிஸ்தவரும் பாவங்களை அறிக்கையிட்டு நம் பாவ வாழ்விலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி தூய வாழ்வை நோக்கிப் பயணிக்க முற்படும் போது அகமதில் இறைவனின் அன்பை உணர்ந்திடலாம், இறைவனின் அருளை இகமதில் நாம் கொணர்ந்திடலாம். 

Tuesday, 19 November 2013

சுமைகளும் சுகங்களே......

நான் வசிக்கும் விளாங்குடி கிராமத்திலிருந்து திருவையாறு என்ற இடம் நோக்கி பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறையும் அந்த இடம் நோக்கிச் செல்லும் போது ஒரு மூதாட்டி தலையில் எதையோ பாரமாக சுமந்து வருவதைக் காண்பது வழக்கம். "யார் இவர்? ஏன் இந்த வயதான காலத்தில் எதையோ கஷ்டப்பட்டு சுமந்து வருகிறாள்?" என எனக்குள் பல முறை கேட்டிருந்தும் அவரிடம் கேட்க பல நாட்களாக எனக்குத் துணிவு வரவில்லை. ஒரு சில தினங்களுக்கு முன்பாக இரு சக்கர வாகனத்தில் திருவையாறு நோக்கிச் செல்லும் போது அதே காட்சி. அந்த மூதாட்டி தலையில் அதே கூடையில் எதையோ கஷ்டப்பட்டு சுமந்து வந்தார். எப்படியாவது இன்று கேட்டுவிட வேண்டும் என எண்ணி, எனது வாகனத்தை நிறுத்திவிட்டு அவரை வழி மறித்து துணிச்சலோடு கேட்டேன், "பாட்டி, யார் நீங்க? எங்கிருந்து வர்றீங்க? உங்களை நான் தினமும் பார்க்கிறேனே" என்று கேட்க, படிக்காத பாமரருக்கு உரிய அதே பாணியிலே அவர் சொல்ல ஆரம்பித்தார்.
"ஏன் பேரு பாப்பம்மா. என்னோட ஊரு திருவெங்கனூர். திருமானூருக்குப் பக்கத்தில இருக்கு. நான்..." என்று இழுத்தவாரே,"ஆமா, நீ யாரு தம்பி? இதெல்லாம் நீ ஏன் கேட்கிறே?" என்றார்.
 "பாட்டி உங்களை நான் தினமும் பார்ப்பேன். நீங்களும் இந்த சுமையை சுமந்துக்கிட்டு ஆடி, ஆடி நடந்து போவிங்க. எனக்கு உங்ககிட்ட பேசனும்னு தோணுச்சு. அது தான் பாட்டி கேட்டேன். தப்பா எதுவும் கேட்டிருந்தா மன்னிச்சுக்கங்க பாட்டி" என்று சொன்ன அடுத்த தருணமே, "நீ என்னத்த தப்பா கேட்டாய்? ஒரு நாளும் என்னட்ட யாரும் பேசுனது கிடையாது. ஆனா நீ பேசுனீயே, அதுவே பொ¢ய விஷயம் தம்பி" என்று சொன்ன அந்த பாட்டியிடம் "நீங்க தலையில தினமும் எதையோ சொமந்துகிட்டு வர்றீங்களே. அது என்ன பாட்டி" என்று கேட்க "இது தயிரு தம்பி. ஒரு ஒம்போது வருசமா எங்க ஊருல இருந்து திருவையாறுக்கு நடந்தே இதை சுமந்துகிட்டு வர்றேன். பஸ்ல என்னைய ஏத்த மாட்டாங்க! அதுனால நான் நடந்தே வருவேன். ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் கிடைக்கும். அதை வச்சுத்தான் வாழ்க்கை ஓடுது.”
“எனக்கு இப்ப 75 வயசு ஆகுது. இருந்தாலும் இதை சுமந்துக்கிட்டு போயி வித்தாத்தான் ஏன் வீட்டில ரெண்டு பிள்ளைகளுக்கு சோறு. அதுனால நான் சுமந்து போயி ஒவ்வொரு நாளும் விக்கிறேன்." 
"75 வயசில இப்படி தலையில சுமையோட ரெண்டு உயிரக் காப்பாத்த, தயிர வித்து கஷ்டப்படுறீங்களே, ஏன் பாட்டி?" என்று கேட்ட அடுத்த தருணம் அவர் பேசவில்லை, அவரின் கண்களில் வடிந்த கண்ணீர் பேசியது. கண்ணீரைத் துடைத்தவாரே, "ரெண்டும் என்னோட பேரப்பிள்ளைங்கப்பா. ரெண்டு குழந்தைகளையும் விட்டுட்டு என் மகள் செத்துப்போயிட்டா. இப்ப நான் தான் இந்த ரெண்டு உயிருக்கும் தயிரு வித்து சோறு போடுறேன்." "ஒம்போது வருசமா, இப்படி கஷ்டப்பட்றீங்களே இது சுமையா தொ¢யலையா?" என்று நான் கேட்க, "எவ்வளவு சுமையா இருந்தாலும், தயிரு வித்துட்டு வீட்டுக்குப் போகும் போது அந்த ரெண்டு உயிர்களும் ஒன்னா 'பாட்டினு' ஓடி வந்து கட்டி அணைக்கும் போது என்னோட "சுமையெல்லாம் சுகமா மாறிடும் தம்பி" என்று அவர் சொன்ன போது என்னையே மறந்து அவரின் சுமை தாங்கிய முகத்தை நோக்க அங்கே மலர்ந்த பரிசுத்த புன்னகை, "எத்தனை சுமைகளாய் இருந்தாலும், விரும்பி சுமந்தால் எல்லா சுமைகளும் சுகங்களே" என்ற வாழ்வின் பாடத்தை எனக்கு உணர்த்தியது.
பிறரின் சுமையை விரும்பி சுமக்கும், ஒரு உண்மையான மனிதத்தைக் கண்டு எனக்குள் சொல்லிக்கொண்டேன், "இதுவன்றோ மனிதம்!" என்று. நாம் வாழும் உலகிலே பிறருக்கு சுமை மேல் சுமையினை ஏற்றி அதிலே சுகம் காணும் மனிதர்கள் மத்தியிலே பிறரின் சுமையினை விரும்பி சுமந்து அதிலே சுகம் காணும் அந்த பாட்டி போன்ற படிக்காத ஆனால் பண்பான மனிதர்கள் ஏராளம். 
மற்றவர்களை வாழ்வில் உயர்த்திட, தங்களால் இயன்ற அளவோ அதனினும் மேலோ பிறரின் வளர்ச்சிக்காய் சுமை சுமந்து சோர்ந்து போய் அந்த சோர்வான சுமையிலே சுகம் காணும் மனிதர்களை இனம் கண்டு அத்தகைய உயா¢ய குணத்தை நமதாக்க ஆசிக்க வேண்டும். "சுமைகளும் சுகங்களே" என்பதை வாழ்வினில் உணர்ந்து நம் வாழ்வினில் சுமைகளை ஏற்று இஷ்டப்பட்டு கஷ்டப்படும்போது வாழ்வு சுகமாய் மாறும் என்பதில் ஐயம் இல்லை. அவ்வாறு பிறரின் சுமையினை சுமந்து அதிலே சுகம் காணும் அந்நொடியே அனைவரும் ஒருமித்து சொல்லலாம் "பிறரின் சுமையினை விரும்பி சுமக்கும் இதுவன்றோ மனிதம்!" என்று.

Monday, 11 November 2013

அடிப்படைத்தேவை.....கணிப்பொறியா....கழிப்பறையா...?


               

"சீச்சீ" என்று தமிழ்நாட்டின் பல கிராமங்களிலும், நகரங்களிலும் பல இடங்களில் விளம்பர பலகைகளை நிச்சயம் பலரும் பார்த்திருப்போம். அதைப் பார்த்த ஒரு சிலர் ‘என்ன இந்த விளம்பரம்’ என வியந்திருக்கலாம். ஒரு சிலர் ஒன்றுமே புரியாமல் குளம்பி போயிருக்கலாம். மற்றும் சிலர் பார்த்தும் பார்க்காதது போல "எனக்கு என்ன தேவை வந்திருச்சு?" என எப்பொழுதும் போல சென்றிருக்கலாம். 
ஆனால் அது என்ன என அறிந்து கொள்ள முயற்சித்து பிறருக்கு அதைப் பற்றி விளக்கிக் கூற விழைந்தவர்கள் மிகவும் சொற்பமே. அது என்ன விளம்பரம் என அறிந்து கொள்ள எனக்கும் ஆசை அதிகம் இருந்தது. ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டு என்னை சிந்திக்கத் தூண்டிய அந்த விளம்பரத்தின் பொருள் அறிய ஒரு சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. காத்திருப்பதிலும் தனி சுகம் உண்டு அன்றோ! ஒரு சில நாட்கள் காத்திருந்து அதே இடத்தில் பொ¢ய விளம்பர பலகையைக் கண்டேன். கண்ட செய்தி என்னை உண்மையில் "சீச்சீ" என்று சொல்ல வைத்தது.
"திறந்த வெளியில் மலம் கழித்தால் 'சீச்சீ' சொல்லப்பா". "சீச்சீ" கழிவறை இல்லாத வீட்டில் கல்யாண சம்பந்தம் பேசலாமா". "சீச்சீ" எருமை சாணி போடுறது மாதிரி, மனுசங்க திறந்த வெளியில் மலம் கழிக்கலாமா?" என பல கேள்விக் கணைகளைத் தாங்கியிருந்தது அந்த விளம்பரப் பலகை. பல நாட்கள் காத்திருந்த எனக்கு அந்த விளம்பரம் ஓர் அறிய பாடத்தை புகுத்தியது. ஆம், இந்திய பொருளாதாரத்தின் அதிலும் குறிப்பாக தமிழகத்தின்  'ஏற்றமிகு' தோற்றத்தை அப்பட்டமாய் படம் பிடித்து காட்டிய அந்த விளம்பரம் ஆட்சியாளர்களுக்கு ஒரு சாட்டையடியாகத்தான் இருந்திருக்கும்.
"இந்தியா ஒளிர்கிறது, தமிழகம் மிளிர்கிறது' என்றெல்லாம் வெற்று வேசம் போடும் அரசியல் தலைவர்கள் எப்படி சொல்லப் போகிறார்கள் பதில். மக்களின் ஓட்டுக்களைச் சுரண்டி, பதவியில் அமர்ந்து கொண்டு எதை எதையோ இலவசம் என அறிவிக்கும் நம் அரசியல் தலைவர்கள் இத்தனை ஆண்டுகளாக ஒரு ஏமாற்று அரசியல் அல்லவா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்த கேள்வி?  என இலவச அரசியலை அதிகம் விரும்பும் ஒரு சிலர் கேட்கலாம். இலவசங்களைக் கண்டு நம் உரிமைகளைக் கேட்டு வாங்க மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ என் உறவுகளுக்கு உண்மை இன்னும் புரியாமலே இருக்கிறது. ஆனால், அது புரியாமலே இருந்து விட்டால் ஒன்றும் புண்ணியம் இல்லை. 
இலவசங்களில் வாழ்வுரிமைகளைத் தொலைத்து விட்டு, ஆகாது என்று தெரிந்தும் அரசியல் வாதிகளில் வெற்று நம்பிக்கையை வளர்த்தால் நம் வாழ்வு அர்த்தம் இன்றி போய்விடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அரசியலை பணம் சுருட்டும் நல்ல கருவியாக பயன்படுத்தும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை, நமது அடிப்படை உரிமைகளும் அடிப்படைத் தேவைகளும் எட்டாக்கனியாகத் தான் இருக்கும். 21ம் நூற்றாண்டிலும் அடிப்படை வசதியின்றி அல்லலுறும் இந்தியர்கள் எத்தனை எத்தனை. வளரும் இந்தியாவில், வாடும் இந்தியர்கள் எத்தனை எத்தனை! ஒளிரும் இந்தியாவில், உருகும் இந்தியர்கள் எத்தனை எத்தனை! என்று விளையும் எங்கள் புண்ணிய பூமி என ஏக்கத்தோடு காத்திருக்கும் விவசாயிகள் எத்தனை எத்தனை! பெண்களாய் பிறந்ததாலே பல்வேறு பெண் கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள் எத்தனை!
நோபல் பரிசு பெற்ற பெருமகனார் பொருளாதார மேதை அமர்த்தியா சென் அவர்களின் ஆய்வின் படி 600 மில்லியன் இந்தியர்கள் மலம் கழிக்க இடமின்றி திறந்த வெளியில் தினமும் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். 
அமர்த்தியா சென் அவர்கள் தான் எழுதிய "An Uncertain Glory " என்ற நூலில், மிக முக்கியமாக எழுப்பும் கேள்வி, "600 மில்லியன் இந்தியர்கள் மலம் கழிக்கச் செல்வது எங்கே?" 'இந்தியா ஒளிர்கிறது' என அறிவிக்கும் அரசியல்வாதிகள் அமர்த்தியா சென் அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திகைப்பது அனைவரும் அறிந்ததே. திறந்த வெளியில் மலம் கழிப்பதால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு அன்றாடம் மக்கள் அவதிப் படுவது அறிந்தும் அறியாமல் இருக்கும் அரசியல்வாதிகள் எப்படி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள் என்பது பொ¢ய கேள்விக்குறியே. 
திறந்தவெளியில் மலம் கழிப்பதால் பரவும் நீர்வினை நோய்களால் இந்தியாவில் தினமும் 1,000 குழந்தைகள் செத்து மடிகின்றனர் என்கிறது புள்ளிவிவரம். இவ்வாறெல்லாம் அடிப்படை வசதியே இல்லாது மக்கள் அல்லலுரும் வேளையில் அவர்களுக்கு அடிப்படைத் தேவை, "கணிப்பொறியா...இல்லை ...கழிப்பறையா..?" 
600 மில்லியன் இந்தியர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. என்ன கேவலம் இது? இந்த கேவலம் புரிய வேண்டியவர்களுக்கு புரியவில்லையே. அறிய வேண்டியவர்கள் அறிந்தும் அறியாமலே உள்ளனரே. இலவசம் என்ற பெயரில் ஒரு ஏமாற்றம் அல்லவா அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இலவசமாய் 'கணிப்பொறி' கொடுக்கும் அரசு, காசுக்கு அல்லவா கட்டண 'கழிப்பறை' வசதி கொடுக்கிறது. கழிப்பறை வசதியின்றி காட்டிலும், மேட்டிலும், இருட்டிலும், நடு ரோட்டிலும் கழிப்பிடம் தேடி அலையும் இந்நாட்டு ஏழைகள் கழிப்பறை காண்பது எப்போது? கணிப்பொறி கொடுத்துவிட்டு, மின்சாரத்தை துண்டித்துவிட்டு, எம்மை கவிழ்த்து விளையாடியது போதும் அரசே! எப்போது நீ அடிப்படை வசதியான கழிப்பறை கொடுக்கப் போகிறாய்? தடுமாறும் உறவுகளே, விழித்தெழ வேண்டிய தருணம் இதுவே. நமக்கு கலர் டி. வி. யும் வேண்டாம், கணிப்பொறியும் வேண்டாம். முதலில் அடிப்படை வசதியான கழிப்பறையைக் கொடுக்கட்டும் அரசு. மக்களின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அரசு செய்யத் தவறும் போதெல்லாம், நாம் அனைவரும் சொல்ல வேண்டும், "சீச்சீ" அடிப்படை வசதியை வழங்காத அரசு ஓர் அரசா' என்று.

Thursday, 3 October 2013

ஏழைகளின் தோழன் அசிசி ...!

ஏழைகளின் தோழன் அசிசி.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் திங்கள் 4-ம் தேதி கத்தோலிக்கத்
திருச்சபையானது ஒரு முக்கியமான புனிதரின் திருநாளை கொண்டாட அழைப்பு விடுக்கிறது.
கி. பி. 1182 ம் ஆண்டு இத்தாலி நாட்டில் உள்ள ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்து,
வளர்ந்து பின்னர் இயேசுவுக்காக அனைத்தையும் துறந்துவிட்டு, எளிமை வாழ்வினை பூண்டு,
திருச்சபை வரலாற்றில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய ஒரு மாபெரும் புனிதர் புனித பிரான்சிஸ் அசிசியார்.
புனிதரின் திருநாளைச் சிறப்பிக்கும் இந்நன்னாளில் அவரது வாழ்வு நமக்கு ஒரு மிக முக்கியமான வாழ்க்கைப் பாடத்தைக் கற்பிக்கிறது என்பதில் ஐயமில்லை.
செல்வாக்கு மிகுந்த ஒரு வணிகரான தன் தந்தையின் செல்வச்செழிப்பில்
தனது இளமைப் பருவத்தை செலவிட்ட அவர், 1204-ல் ஆண்டவர் இயேசுவால் ஆட்கொள்ளப்பட்டு
உலக வாழ்வினை வெறுத்து தனக்குச் சொந்தமான தன் தந்தையின் செல்வம்
அனைத்தையும் வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு ஏழைகளின் தோழனாய் எளிமை வாழ்வு பூண்டார்.
தன்னை ஆட்கொண்ட இயேசுவுக்காக எல்லாவற்றையும் இழந்து
எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு பாவித்து எளிமையினை மையப்படுத்திய ஓர் இனிமையான
ஆன்மீத்தை அனைவருக்கும் தனது வாழ்வினால் வழங்கினார்.
1209- ல் பிரான்சிஸ்கன் துறவற சபையினைத் துவங்கி அதன் மூலம் எளிமை வாழ்வினை வாழ்ந்து
ஏழைகளின் தோழர்களாய் இயேசுவைப் போதிக்க அழைப்பு விடுத்தார்.
தனது 42ம் வயதில் ஆண்டவர் இயேசுவின் ஐந்து திருக்காயங்கள் அவருக்கு வழங்கப்பட்டு
அதிக வேதனைகளை அனுபவித்து தனது 44ம் வயதில் 1226ம் ஆண்டு உயிர் நீத்தார்.
இவர் மறைந்தாலும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் இவரின் வாழ்வும், உயரிய ஆன்மீகமும்
இன்றும் பலரையும் கவர்ந்திழுக்கின்றது. ஏழை எளியோரிலும், வாடிடும் வறியோரிலும்,
பறவைகள் விலங்குகளிலும் பரமனைக் கண்டு தரிசித்து இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த
இப்புனிதரின் வாழ்வு இந்த நவீன உலகில் இயற்கையை மதிக்க மறுக்கும் மானுடத்தை மாற்றிட வேண்டும்.
பணத்திலும், பகட்டிலும் கவனம் செலுத்தும் மனிதர்கள் அனைவரும் பணிவிலும், பரிவிலும்
கவனம் செலுத்தி பண்பான வாழ்வு வாழ்ந்திட புனிதரின் வாழ்வு வித்திடட்டும்.
ஏழைகளின் தோழன் புனித அசிசியை பின்பற்றி ஏழைகளின் தோழனாய்
எழுச்சிமிகு வார்த்தைகளாலன்றி எளிமையான வாழ்வால் கிறிஸ்துவை அறிவித்துக் கொண்டிருக்கும்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையிலே ஏழைகளிலும், இயற்கையிலும்
இறைவனைக் கண்டு பணிவிலும் பரிவிலும் நிலைத்து ஏழைகளின் தோழர்களாய் வாழ
முற்படும் போதுதான் நாம் கொண்டாடும் இத்திருநாள் அர்த்தம் பெறும் நமது விசுவாசமும் ஆழம் பெரும்.

Saturday, 21 September 2013

இதுவன்றோ மனிதம்..!

ஜீலை மாதம் 13 ஆம் தேதி சனிக்கிழமை. ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் கிராமத்திலிருந்து, தஞ்சாவூர் மாவட்டம் விளாங்குடி என்ற கிராமத்தை நோக்கிய பேருந்துப் பயணம். அப்பயண நேரத்திலே உறங்கிக் கொண்டிருந்த என்னை உசுப்பி விட்ட ஓர் அனுபவம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலே நான் வந்த பேருந்து நிற்க, விரட்டி அடித்துக் கொண்டு பலர் பேருந்துக்குள்ளே ஏறினர். மங்களகரமாக மல்லிகைப் பூச்சூடி தமிழ்நாட்டுப் பாணியிலே தாவணி அணிந்து இளம் மங்கையர் சிலர் வந்தனர். அவர்களைத் தொடந்தாற்போல் ஒரு சில இளைஞர்களும் வந்தனர். அவர்களெல்லாம் ஏதோ நன்கு படித்தவர்கள் போல கண்ணுக்குப் பட்டனர். அனைவர் கைகளிலும் இருந்த அலைபேசி அவர்களின் விரல்களால் அடிவாங்கிக் கொண்டிருந்தது. முண்டி மோதி உள்ளே வந்த அவர்களைத் தொடர்ந்து களைப்போடு நடுத்தர வயது மிக்க ஒரு சில ஆண்களும், பெண்களும் ஏதோ கட்டிட வேலை பார்த்து விட்டு கால், கைகளிலெல்லாம் சிமெண்ட் படிந்ததோடு கைகளில் பழைய தூக்கு வாலிகளோடு வந்தனர். அவர்களோடு ஒரு வயதான மூதாட்டியும் வந்தார். பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது அந்த மூதாட்டியின் கோலம். “இந்த வயதான காலத்தில் ஏன் இப்படி கஷ்டப்பட்டு கட்டிட வேலைக்கு போகிறார் இவர்? ஒரு வேளை குழந்தைகள் கஞ்சி ஊத்த மறுத்திருப்பார்கள்” என என் உள் மனதிற்குள் எண்ணிக் கொண்டே அந்த மூதாட்டியை நோக்கிய வண்ணம் இருந்தேன். அனைவரும் அமர்ந்த பிறகு மீதி இருந்த ஓர் இருக்கையிலே அமர்ந்தவாரு அவர் சொன்ன வார்த்தைகள் என் காதில் விழுந்தன. “பாவம், யாரு பெத்த புள்ளையோ? முப்பதாயிரம் ரூபாய தொலச்சிட்டு அழுதுகிட்டு இருக்கா. பாவம் பணத்த பத்திரமா வைக்காம எவனோ திருட்டுப் பய அடிச்சிட்டு போயிட்டானே?”என்று பணத்தை தொலைத்து விட்டு பரிதாப நிலையில் இருந்த வேறொரு பெண்ணுக்காக புலம்பினாள் உழைப்பின் களைப்பில் இருந்த அந்த மூதாட்டி. “போனது போயிருச்சு அத நெனச்சி என்ன பண்றது. நீ ஏன் பாட்டி கவலப்படுற?” என்று படித்தவர் போல் இருந்த ஒருவர் கேட்க, “தம்பி… உழச்சு சம்பாதிச்சா பணத்தோட அரும தெரியும். பட்டம் படிச்ச உங்களுக்கு தெரியுதோ, இல்லையோ பள்ளிக் கூட நெழலுக்கே போகாம கட்டிடம் கட்டி கஷ்டப்படுற எனக்கு காசோட கஷ்டம் தெரியும் பா!”என்று சொன்னதைக் கேட்டு வாயடைத்துப் போனான் அந்த வாலிபன். அவனைத் தொடர்ந்து வேறொருவர் அந்த பாட்டியிடம் “வேற யாரோ தொலச்சதுக்கு நீ என்ன பாட்டி ரொம்ப கஷ்டப் படுற?” என்று கேட்க, “என்னப்பா நீ பேசுற. ஆயிரம்தான் இருந்தாலும் அவளும் ஒரு மனுசி தானே. முப்பதாயிரம் சேர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பா?
நடந்த அனைத்தையும் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்த எனக்கு உண்மையான மனிதத்தினை அங்கே காண முடிந்தது. தன்னைப் பற்றியே சுயநலப்போக்கோடு சிந்திக்கும் மனிதர்கள் மத்தியில் அந்த மூதாட்டியின் மனநிலை என்னை அதிகம் கவர்ந்தது. பட்டம் படித்தும் பலர் தங்களைத் தவிர வேறு யாரையும் நினைக்க மறக்கும், மறுக்கும் இந்த சுயநல உலகிலே, உழைத்த களைப்பிலும் பணத்தினை தொலைத்து விட்டு கஷ்டப்படும் முகவரி தெரியாத ஒருவருக்காய் வருந்துகிறாரே இந்த மூதாட்டி. அந்த தருணமே சுய நலம் மறைந்து பிறர் நலம் பிறக்க வேண்டிய முக்கியத்தை உணர்ந்தேன். படித்துவிட்டோம் என்று பகிரங்கமாய் சொல்லிக் கொண்டு அலைபேசிகளை அழுத்தியே காலத்தைக் கழித்து, தன்னைப் பற்றியே சிந்திக்கத் துடிக்கும் என்னைப் போன்ற படித்தவர்கள் அந்த மூதாட்டி போன்ற படிக்காத பாமரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் ஏராளம். ஆயிரம்தான் இருந்தாலும் அவனும் மனிதனே என்று அடுத்தவனுக்காய் பிறர் நலத்தோடு சிந்திக்கும் போது மனிதம் நிச்சயம் மலர்ந்திடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. சுயநலச் சாக்கடையில் சோம்பேறிகளாய் செத்தழிந்தது போதும், பிறர் நலம் பேணிக் காத்திட பிறருக்காக நம் வாழ்வினை அர்ப்பணிப்போம். அப்போது அர்த்தம் பெறுவது நம் வாழ்வு மட்டும் அல்ல பிறரின் வாழ்வும் தான்;. சுயநலம் மறைந்து பிறர் நலம் பிறந்திடும் போது “இதுவன்றோ மனிதம்!” என மனிதத்தைப் போற்றிடலாம், மானுடத்தை மாற்றிடலாம், மகத்தான பணியை மனிதத்திற்கு ஆற்றிடலாம்.

Wednesday, 4 September 2013

ஆசிரியப்பணி அறப்பணியே...


கொம்படிமதுரை – சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமம். இக்கிராமத்திலுள்ள ஆர்.சி தொடக்கப் பள்ளியில் நான் தொடக்கக் கல்வி பயின்றேன். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் நான் என் பள்ளியைப் பற்றி அதிகம் நினைப்பதுண்டு. அதற்கு காரணம் என் கையினைப் பிடித்து எழுத்து பலகையிலே “அ, ஆ, இ…” எழுத சொல்லிக் கொடுத்த ஆசான்கள்தான். இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவர்களை நான் நினைவுகூறக் காரணம் அவர்கள் ஆற்றிய அறப்பணியாம் ஆசிரியப்பணியே. அவர்களின் அன்பையும், அடியோடு கூடிய அரவணைப்பையும், கஷ்டங்கள் மத்தியில் அவர்களின் கடின உழைப்பையும் கண்டு வியந்த மாணவர்களில் நானும் ஒருவன். இத்தனை வருடங்களையும் விட இந்த வருடம் என் பள்ளியைப் பற்றிய பெருமை என்னுள் அதிகம் எழுந்தது. அதற்கு ஒரு காரணம் உண்டு.
அன்று தொடக்கப் பள்ளியாக இருந்த எனது பள்ளி இன்று தூய யூஜின் உயர் நிலைப் பள்ளியாக உயர்ந்துள்ளது. சாதாரண ஏழை மாணவ, மாணவிகள் பயிலும் இப்பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100மூ  தேர்ச்சி. நிறைய மாணவர்கள் நல்ல மதிப்பெண்களும் எடுத்திருந்தனர். எத்தனையோ பள்ளிகள் சாதனை படைக்க பல வகைகளில் முயற்சித்தும் முடியாது திகைத்த தருணத்தில் இக்  கிராமப் புற பள்ளியின் குட்டிச் சாதனை உண்மையில் என்னை குதூகலப்படுத்தியது. தேர்வு முடிவுகள் அறிந்து, அங்கு பணி செய்யும் என் அண்ணியிடம் வாழ்த்துக்கள் சொன்ன போது அவர் சொன்னார் “இதற்கு முக்கிய காரணம் இங்கு பணி செய்கின்ற ஒரு சில உண்மையான, உயரிய பணி செய்யும் தியாக மனமுடைய ஆசிரியர்களே!” என்று. இக்காலத்து ஆசிரியர்களைப் பற்றிய மாறுபட்ட எண்ணம் கொண்டிருந்த நான், “அப்படி என்ன பெரிய தியாகம் செய்துவிட்டார்கள் அந்த ஆசிரியர்கள்?” என்று விளையாட்டாய் கேட்ட பொழுது அவர் சொன்னார், “பெரிய படிப்பு படித்துவிட்டு, குறைவான ஊதியத்தில் நிறைவாக பணி செய்கிறார்கள். வேறெங்காவது சென்று அதிக சம்பளத்திற்கு குறைவாக வேலை செய்யலாம். ஆனால் அதைத் துறந்துவிட்டு இக்கிராமத்திலே தியாக மனத்தோடு அவர்கள் செய்யும் பணி போற்றுதற்குரியது.” என் அண்ணி அன்ற சொன்னது என் உள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. கிராமப்புறத்திலே அவர்கள் செய்யும்  பணி உண்மையில் ஓர் அறப்பணியே என்பதை உணர்ந்து ஆசிரியப்பணியின் மகத்துவத்தை கொஞ்சம் மாண்போடு நினைவு கூற முடிந்தது.
“அன்ன சத்திரம் ஆயிரம் கட்டலும், ஆலயம் பதினாயிரம் நாட்டலும், அன்ன யாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே” என்ற உயரிய நோக்கோடு இன்றும் உண்மைப் பணி புரியும் மாமனிதர்களை நினைவு கூற வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தேன். அந்தப் பள்ளியைப் போல் எத்தனையோ கிராமப் புறங்களில் அடிப்படை வசதியின்றி அல்லலுறும் ஏழைகளுக்கு எழுத்தறிவிக்;கும் ஆசான்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காய் ஒரு விழா எடுப்பது சாலச் சிறந்ததே. அடித்தட்டு மக்களின் அகவிருள் நீக்கி அறிவொளி ஏற்றிட அயராது உழைக்கும் ஆசிரியர்கள் அனைவரையும் அன்போடு நினைவு கூர்ந்து அவர்களுக்கு விழா எடுக்கத் தான் ஆசிரியர் தினம் அழைப்பு விடுக்கின்றது. செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி ஒரு நிமிடம் யோசித்தால் உண்மை தெரியும். நம் ஒவ்வொருவரையும் உயர்த்திவிட்டு வாழ்வில் பல சாதனை படைக்க, புது சரித்திரம் புடைக்க உசுப்பி விட்ட உன்னதர்கள் நம் ஆசான்கள் என்று. ஆசிரியப்பணி அறப்பணி என்பதை உணர்ந்து பல ஆசிரியர்கள் பணி செய்து ஆசிரியப்பணிக்கு பெருமை சேர்த்தாலும் இன்றைய உலகில் அறப் பணியாம் ஆசிரியப் பணியின் அர்த்தத்தை உணராது கடமைக்கு காலத்தைக் கடத்தும் ஆசிரியர்களும் ஏராளம். “வேலியே பயிரை மேய்வது போல்” கல்விக் கண் திறக்க வேண்டிய ஆசான்களே தங்கள் மாணவர்களை பகடை காய்களாய் பயன்படுத்துவதும், சாதியின் பெயரில் பிரிவினை பார்த்து தாழ்த்தப்பட்ட மாணவர்களை மாண்போடு மதிக்க மறுப்பதும் நம் கண் முன் அரங்கேறும் பரிதாப நிலை. கல்வி காசாக்கப்பட்டு, காசுக்காய் மகத்துவத்தை உணர்த்த மறுக்கும் ஆசிரியர்களும், நம் நாட்டில் இருப்பது நாம் அறிந்ததே. ஏழைக்கொரு கல்வி செல்வந்தனுக்கோ மற்றொன்று என கல்வியில் பாகுபாடு காண்பித்து பிஞ்சுக் குழந்தைகளின் மனதிலே நஞ்சினை விதைக்கும் கொடூரம் பல இடங்களில் நடைமுறையாகிவிட்டது. பள்ளியில் கற்பிப்பதை விட, மாலை நேரங்களில் டியூசன் என்ற பெயரில் பணத்தினை சுரண்டும் ஆசிரியர்கள் எத்தனை, எத்தனை! இவையெல்லாம் அரங்கேறுவது அறப்பணியாம் ஆசிரியப்பணிக்கு இழுக்கு என்பதை ஆசிரியர்கள் பலர் மறந்துவிட்டனர். ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களுக்கு விழா எடுத்து, அவர்களை போற்றி நன்றி கூறுவது மாணவர்களின் மகத்தான கடமையாக இருந்தாலும், ஆசிரியர்கள் தங்களின் கடமையை மறந்துவிடக் கூடாது. ஆம், ஆசிரியர்கள் அனைவரும் தாங்கள் ஆற்றுவது அறப்பணி என்பதை ஆழ்ந்து உணர்ந்து அதன்படி தங்களின் வாழ்வினை மாற்றிட வேண்டும். நவீன உலகிலே நாளுக்கு நாள் சமூக அவலங்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் ஒழுங்கான கல்வியின்மையே. சமுதாய அவலங்கள் மறைந்து புது சமுதாயம் புலர்ந்திட வேண்டுமெனில் உண்மையான, ஒழுக்கம் நிறைந்த, பாகுபாடில்லாத, மனிதத்தை வளர்க்கும் வளமான கல்வி முறை மலர்ந்திட வேண்டும். அத்தகைய வளமான கல்வி முறையை வார்த்தெடுக்க வேண்டிய வித்தகர்கள் ஆசிரியப் பெரு மக்கள். ஒவ்வோர் ஆசானும் “ஆசிரியப் பணி அறப் பணியே” என்பதை உணர்ந்து அதை முனைப்போடு ஆற்றிட முயற்சிக்கும் போதுதான் அது சாத்தியப் படும். அறப் பணியாம் ஆசிரியப் பணி அறவழியில் செழிக்கும் போது “ உலகம் சம நிலை பெற வேண்டும், உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்” என்ற அகத்தியரின் கனவு அகிலம் தனில் நனவாகும். அப்போது நாம் சமுதாய அவலங்கள் நீக்கி சமத்துவ வழியில் சாதனை தினமும் படைத்திடலாம், பிறரின் வேதனை நிதமும் துடைத்திடலாம், புது சரித்திரம் வாழ்வில் அமைத்திடலாம்.